திங்கள், 22 நவம்பர், 2010

தமிழில் சிறு பத்திரிக்கைகளுக்கான காலம் முடிந்து போய்விட்டதா?- மு.சிவகுருநாதன்

("சஞ்சாரம்" இதழை வெளியிடும் முன்பு நாம் அனுப்பிய துண்டறிக்கை.இது சஞ்சாரம் முதல் இதழ் உள்அட்டையில் வெளியானது.)

தமிழில்சிறு பத்திரிக்கைகளுக்கான காலம் முடிந்து போய்விட்டதாக ஓய்வு பெற்ற எழுத்தாளர்கள் அறிவிக்கிறார்கள். சிறு பத்திரிக்கை என்று
தொடங்கப்பட்டவையயல்லாம் பெரும் பத்திரிக்கையை நோக்கிய பாய்ச்சலில் இடைநிலை இதழ்களாக உருமாறி வருகின்றன. சிறு பத்திரிக்கை இயக்கத்திலிருந்து பெரும் பத்திரிக்கைக்குத் தாவுவதும் பெரும் பத்திரிக்கைகள் சிறு பத்திரிக்கை வாசகர்களைக் குறி வைத்து இதழ் நடத்துவதும் இங்கு சாத்தியமாகி உள்ளது.

மய்யநீரோட்ட இலக்கிய, அரசியல், கலை வடிவங்களுக்கு மாற்றுக்களைக் வெளிக் கொணர்ந்த சிறு பத்திரிக்கை இயக்கம் இன்று தொய்வடைந்துள்ளது. சிறு
பத்திரிக்கைக்கான தேவையும், காலந்தோறும் புதிய பல நெருக்கடிகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும் வேளையில் காத்திரமான விமர்சனங்களையோ, படைப்புக்களையோ இடைநிலை இதழ்களில் காண முடிவதில்லை. வாரம், வாரமிருமுறை இதழ்களுக்குப் போட்டியாக இடைநிலை இதழ்கள் எவ்வித கொள்கைகளும் இன்றி பக்கங்களை நிரப்பி வியாபாரத்தைப் பெருக்குகின்றன. சிறு பத்திரிக்கை மற்றும் பெரும் பத்திரிக்கைக்கான இடைவெளி முற்றிலுமாக அழிந்து இரண்டு தளங்களிலும் இயங்குபவர்கள் வியாபார நோக்கங்களுக்காக இணைந்து உலா வருவதை தற்போது அவதானிக்க முடிகிறது.

சென்ற நூற்றாண்டின் கடைசி இருபது ஆண்டுகளில் ஏற்பட்ட
எழுச்சியும் தாக்கமும் தற்போதைய காலங்களில் முற்றிலும் சுணக்கம் கொண்ட
செயல்பாடுகளும் முடங்கிப் போன பலரது நிலையும் நம்மை கவலை கொள்ள வைக்கின்றன.

தேஹ்ரிஅணை, சர்தார் சரோவர் அணை போன்றவற்றை அடுத்து சேது சமுத்திரத் திட்டத்தை சுற்று சூழலியர்களிடமிருந்து இந்துத்துவவாதிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். தொலைக்காட்சி விளம்பரத்தில் கூட அக்பர் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை கேள்வி கேட்க முடிகிறது. ஆனால் ராமனுக்கான ஆதாரம் கேட்டால் தலைக்கு விலை அறிவிக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்கள் சிலரும் இத்துத்துவாவிடம் இணக்கம் கொண்டிருக்கும் சூழலாக இது இருக்கிறது.

பாலியல் கல்வியை எதிர்க்கும்இந்துத்துவா கட்சிக்கு இது பற்றி விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு தலைமைப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதவாதத்தை எதிர்க்க இன்றுள்ள ஒரே நம்பிக்கை இடதுசாரிகள் மட்டுமே. 123 அணுசக்தி ஒப்பந்தத்தில் இடதுசாரிகள் காட்டிய வேகத்தை போலல்லாது ‘ராமர் பாலம்’ பிரச்சனையில் இடதுசாரிகளின் நிலைப்பாடு மிகவும் கவலைஅளிப்பதாகவே இருக்கிறது.

டீக்கடைகளில் தலித்துகளுக்கு இன்னும் தனிக்குவளைதான்.
ஆனால் தலித் இயக்கங்களும் தலைவர்களும் தனித்தமிழ் பெயர் சூட்டல்,
விடுதலைப்புலிகள் ஆதரவு என்று கலாச்சார வாதிகளாக மாறி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள தலித்துகள் பற்றி எவ்வித
அக்கறையும் இல்லை. உத்திரப் பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி மாயாவதியின் வெற்றி பிராமணர்களின் வெற்றியாக கணிக்கப்பட்டு, தமிழகத்திலும் அது தேவை என்று வலியுறுத்தப்படுகிறது. தலித் -பிராமணர் கூட்டணி இயல்பானது என்று பிரச்சாரம்செய்யப்படுகிறது. அம்பேத்கர் மற்றும் பெரியார் போன்றோரது செயல்பாடுகள் மலிவான முறையில் கொச்சைப்படுத்தப்படுகிறது.

தலித் அரசியலின் கூர்மை மழுங்கடிக்கப்பட்டு தலித்துகள் கையில் அதிகாரம் என்பது தலைவர்களின் அதிகார போதை -துய்ப்பு என்பதாக புதிய பரிணாமம் கண்டுள்ளது. தலித்துகளில் ஓரங்கட்டப்பட்ட அருந்ததியர்கள் தனியே போராட வேண்டிய சூழல் இருக்கிறது. சிறுபான்மையினர்களுக்கு எதிரான வன்முறை பல்வேறு தளங்களில் நிகழ்ந்து கொண்டு வருகிறது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக இந்துத்துவ சக்திகள் பிற்பட்டோரை தூண்டிவிடும் போக்கு உள்ளது.

தமிழ்சினிமா எப்போதும் போல் குப்பைகளை உற்பத்தி செய்து கொண்டுள்ளது.
தமிழ்ப்பெயர் என்ற ஒரே காரணத்திற்காக இவற்றிக்கு மக்கள் வரிப்பணம் வாரி
இறைக்கப்படுகிறது. திராவிட இயக்க சென்சார் போர்டுகளின் உதவியுடன் பெரியார் படம் வெளியிடப்பட்டு அதில் முடிந்தவரை பெரியாரை
கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். அவரைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள்
அவரின் கொள்கைகளை கொஞ்சம் கூட நினைப்பது இல்லை.

அரசியலைப்போலவே இலக்கியத்திலும் வாரிசுகளின் அடாவடித்தனங்களை சகிக்க முடியவில்லை. ‘இலக்கியமேஸ்திரிகள்’ எண்ணிக்கையில் பெருகி வருகிறார்கள் வாசகன் - படைப்பாளி உறவு மீண்டும் அதிகாரத்தை நோக்கியதாக கட்டமைக்கப்படுகிறது.

இத்தகைய சூழலில் ஒரு சிறு பத்திரிக்கையின் பணி என்னவாக இருக்கமுடியும்?

01. அனைத்துத் தளங்களிலும் மாற்றுக்களைத் தேடுதல்.

02. சிறு பத்திரிக்கைச் சூழலில் இப்போது இருக்கின்ற இடைவெளியை நிரப்புதல்.

03. தமிழ்ச்சூழலில் மீண்டும் விவாதத்திற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துதல்.

04. எங்கோ ஓர் மூலையில் இயங்கும் ஒத்த கருத்து உடையவர்களை இணைத்துக்கொண்டு செயல்படுதல்.

05.நிலவுகின்ற சமூக அமைப்பை கேள்விக்குட்படுத்துவதோடு மறைக்கப்பட்ட /
ஒதுக்கப்பட்ட வரலாறுகள் மற்றும் எழுத்துக்களை வெளிக்கொண்டு வருதல்.

06. பெண்களின் எழுத்தை அதன் இயல்பான வீச்சோடு தணிக்கைகள் இன்றி வெளிப்படுத்துதல்.

07. புலம் பெயர் எழுத்துக்களில் உள்ள மேட்டிமைத்தனங்களை நீக்கி அடித்தட்டு மக்கள் எழுத்தைப் பதிவு செய்தல்.

08. அரவாணிகள் பற்றிய எழுத்துக்கள் மூலம் அவர்களது வலியை/வேதனைகளைப் பதிவு செய்வதோடு அவர்களது படைப்பாளுமையை இனம் காணல்.

09. கதை, கவிதை, சினிமா, ஓவியம், சிற்பம், இசை போன்றவற்றோடு களஆய்வு, வாய்மொழி வரலாறு போன்றவற்றையும் தொகுத்தல்.

10. யதார்த்த வகை எழுத்துக்களின் போதாமைகளை தவிர்க்க நான் லீனியர் எழுத்துக்களை பயன்படுத்தல்.

11. வெகுஜன மக்கள் திரளின் சினிமா, இசை, அரசியல் இன்னபிற சொல்லாடல்களின்பால் கவனம் குவித்தல்.

12. உலகமயம், தனியார்மயம், தாராளமயம் போன்றவற்றால் கேலிக்குள்ளாகும் ஜனநாயகம்/சமூகம் சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தல்.

சார்புஇல்லாத தனித்த செயல்பாடு என்று ஒன்று இருக்க முடியாது. நுண்ணரசியல் சார்பு மற்றும் முன்னுரிமை வேலைத்திட்டங்களின்படி எங்களது செயல்பாடு அமையும். நிறப்பிரிகை, கிழக்கு, அனிச்ச வழியில் சஞ்சாரமும் தலித்துகள், பெண்கள், அரவாணிகள், சிறுபான்மையினர், விளிம்பு நிலையினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அனைவரின் ஊடாக அகமும் புறமும் பயணிக்கும். எங்களது கருத்துக்களோடும் செயல்பாட்டோடும் இசையும் தோழர்கள் அனைவரது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறோம். தங்களின்
கருத்துக்களையும் படைப்புகளையும் எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

அக(கா)லமாகும் வதந்திகள் -செல்மா பிரியதர்ஸன்

சாலையோரங்களில்
மரங்களை நட்டவன் கருணைமிக்கவன்
எனினும்
அந்திநேரங்களில் அடையவரும் பறவைகள்
வாகனப் பேரிரைச்சல்களைப்
பொருட்படுத்துவதில்லை
மரங்களை நட்டது
அசோகர்தான் என்று நம்புவது
சிறுவர்களின் வரலாற்றுப் பிரம்மைதான்
கோடை உலுப்பிய
புளியம் பழங்களைப் பொறுக்கிய
மூதாட்டிகளில் ஒருத்தி
சக்கரங்களில் நசுங்கிப் பிசாசாகத் தொங்குவதும்
சாலை வளைவுகளில்
தொடர்பலிகள் கேட்பதும்
பழங்கால வதந்திகள் என்று ஒதுக்குவதற்கில்லை
அரசாங்கம் என்பதும் சேவகம் செய்வது
அது சாலைகளை அகலமாக்கும்
அப்போது வெட்டிச் சரியும் மரங்கள்
பெருங் குரலெடுத்துச் சரியும் ஓசை
சாபமாக வானின் மீது படியும்
எனச் சொல்பவன் பயங்கரவாதி
வளர்ச்சிக்கு எதிரான அவன்
எங்காவது தொலைந்து போகலாம்
இப்போதும் வீழ்ந்த மரங்களிலிருந்து
கூடுகளைப் பத்திரப்படுத்திக் கொண்டு போகிறவர்கள்
சிறுவர்கள்தான்
ஒப்பந்தக்காரர்களின் கன்டெய்னர்கள்
சாலைகளை இறக்கிவைத்துவிட்டு
கிராமங்களின் நிழல்களை
தூக்கிச் செல்கின்றன
சாலையோர கல்லறைகளில் பிடுங்கி எறியப்பட்ட
கபால எலும்புகளைப் பதியனிட
மாற்றிடம் வேண்டி
பொக்லைன்களிடம் மன்றாடுவது வேடிக்கைதான்
அடையாத அந்திகளில்
சிறுவர்கள் சேகரித்த கூடுகளை
இரகசியமாய் திறந்து பார்த்துக் கொள்கையில்
திசை குழம்பிய பறவைகளின் உள்ளுறைந்த கூச்சல்
பெரும்பாலானோர் தங்களது இருப்பிடங்களை
கடந்தும் சென்றுகொண்டிருக்க
சிலர் சித்த பிரம்மையாகிவிட்டார்கள்
நீண்ட கன்டெய்ணர்களுக்காக
அகலமாக்கப்பட்ட சாலையின் முடிவில்
தெரியும் கட்டிடம் கூட
நமது பாராளுமன்றம் இல்லை என்று சொன்னால்
இனி அவர்களுக்குப் புரியப்போவதில்லை.

ச.ப்ரியா கவிதைகள்

வெயில்கால இரவு

யானையின் தும்பிக்கை
லாவகத்துடன்
கபளீகரம் நிகழ்த்தும்
பொக்ளியர் இயந்திரத்தின் இரைச்சல்
பீறிட்டழும் மரங்களின் மரணஓலம்
வேர் நரம்புகளை
பிடுங்கியெறிந்து
நிரத்திய மண்பரப்பு
ஆலை கட்டிடங்களுக்கு அடியில்
பறவைகளின் கிறீச்சிடல்கள்
தொலைந்து போனதொரு வெளியில்
பரவியிருக்கிறது
சைரனின் சங்கொலி அலறல்
சாயக் கழிவு
கலந்த குளத்துநீரில்
நமக்கான சூரியனின் பிம்பம்
மங்கிய ஓளிர்தலில்
இன்னமும்
என் அறையில்
பசுமையும் நீர்செழிப்புமான
பச்சை நிறக்காடுகளை
ஒளிபரப்பிக் கொண்டேதானிருக்கின்றன
டிஸ்கவ்ரியும்
நேஷ்னல் ஜியோக்ரபிக் சேனலும்.

வெயில்கால இரவு

தூரத்து மலையில்
நீண்டு நெளிந்து
பற்றியெறியும்
நெருப்பின் வேட்கை
வனம் விழுங்கிவிட்ட பிறகும்
நீள்கிறது
அஸ்தமன இருளின்
மலைமுகட்டில்
ஒரு இரவுச் சூரியனை
உயிர்ப்பித்துவிடும்படியாய்!

உமா மகேஸ்வரி கவிதைகள்

சித்திர அரூபம்

எல்லாமும் நகர்கின்றன
விரைந்து.
நிற்பதேயில்லை அவை
திரும்பியும் பார்ப்பதில்லை.
அவற்றை
மீட்டெடுக்க முடிவதில்லை மீண்டும்
மீண்டும்
எந்தச் சக்தியும்.
பறந்து மறைகின்றன
அவை.
இந்த அரூபச் சித்திரத்தின்
வளைவுகளோடு
இழைதல்
உன்னை மீறியதா?
சுழலும் இதே
திகிலின்பத்தில்
சுண்டப்பட்டு தொலைந்து
சிதறுவதும்?

நுழைதலற்ற கதவுகள்

கார்த்திகை மழைநாளின்
கரிய இரவுகள்
நடக்கின்றன
ரகசியக் காலடிகளோடு,
கண்காணிப்புகளைத் தவிர்த்து.
இன்று உதயத்தின் விழிமூட
கிழக்குக் காற்றின்
நச்சரிப்புக்களைப்
பொருட்படுத்தாமல்
நீல வானில்
ஒரு அடர்திரை
இழுக்கப்படுகிறது.
புல்வெளிகளின் முணுமுணுப்பு
மூடிய கதவுகளோடு வீடுகள்.
இந்தப் பாலைத் தெருவில்
தனித்த பயணியின் பாதத்தடங்கள்
கடக்கின்றன
என் திறந்த வீட்டின் கதவுகளுக்குள்
நுழையாமல் தாண்டி.

அழையாமை

செல்போன் ஒலியென
நடுங்குகிறது பாதி விழிப்பு.
கோதிக் கொண்டிருக்கிறது காற்று
கந்தலான இரவுகளை.
சுருண்ட ஓடுகளோடு
குறுகிக் கிடக்கும் காலம்
செத்த ஆமையாக.

தூர மயான நெருப்பு
கேலிக்குளிர் வீசுகிறது
என் நாட்களின் மீது
அடிக்கடி.
உலர்ந்த முத்தங்களில்
இருந்து வடியும் சீழ்.

உணர்ந்தேயிராத
தாய்மை இதழ் தேடி
கனகாம்பரத்தைத்
தொடுக்கையில்
உறுத்தும் பாதச் சிறகு.
விரிந்த விரல்களின் சல்லடையில்
யாருடையதோ கண்ணீர்.
பொருக்குக் காய்ந்த
உணர்வுகளுக்குள்
புனல் சிறகசைக்க
போதுவதேயில்லை
ஒற்றை அழைப்பு.

கைக்குட்டைக் கனவுகள் -பிரேம பிரபா

தத்தம் கனவுகளை
யாருமறியாமல்
எடுத்துப் போகிறவர்கள்
பாக்யவான்கள்.
துவைத்து உலர்த்திய
கைக்குட்டையெனினும்
இழையின் ஓரங்களில்
மடிப்பின் பிளவுகளில்
கனவுகள் ஒளிந்திருக்கும்
சாத்தியக் கூறுகளுண்டு.
முகத்தருகே
கைக்குட்டையைக்
கொண்டு போக
உங்களை முத்தமிட்ட கனவுகள்
கண்களை மூடியபடி
தவிப்புடன் இருக்கும்
மீண்டுமோர் முத்தத்திற்காக.
சுவாசம் திணறும்
வாசனைத் திரவியங்களால்
போதையேறி
தள்ளாடிவிழும் கனவுகளை
உங்கள் வீட்டிலோ
அலுவலகத்திலோயிருந்தால்
அப்புறப்படுத்திவிடுங்கள்
துளியேனும் தாமதிக்காமல்.
முடிவாக ஒன்று
இனிமேலாவது
உங்கள் கைக்குட்டைகளை
நீங்களே பராமரியுங்கள்.
குறைந்த பட்சம்
கனவுகளின் ரகசியங்களை
பாதுகாக்கும் பொருட்டாவது.

இருத்தல் நிமித்தங்கள்... :-பு.க.சாலினி

வெளிறிய வானில் வெண்மேகத் திட்டுகள்
களிபாளம் விட்ட மனதில் படரும் சஞ்சலப் படிவுகள்
மனித முகங்களின் மனப்போக்குவரத்தில்
மறைந்து சிதையும் தீற்றல் புள்ளிகள்
மின்னல் வேலியில் சருகுகள்
விள்ளல் முகம் நோக்கிய உறவுகள்
உன்மத்த உலகினையும் ஊழல் உப்பரிகைகளையும்
சிறை கொண்டன கேந்திரங்கள்.
அன்பின் வறுமை தெளிவின் வெறுமை
அன்றாடப் பூபாளம் நாட்காட்டியுடன்
மன்றாடும் நீலாம்பரி விழித்துளிகள்
மனிதச் சக்கைகளின் அகங்களில்
சரள சம்பிரதாயச் சரடுகள்
மரத் தக்கைகளுடன் சுவர்களில் புரளும் இதயச் சுவடுகள்
கண்களின் எதிர்பார்ப்பு விரிசல்கள்
கனவுக் கண்ணாடிஉடைசல்கள்.
கவலை எச்சக் கிழிசல்கள் கவியான ஆசைப் பிழியல்கள்
ஏகாந்தத்துடன் தனிமை உறவாடல்
எதிர்க்காற்றில் கருத்துக் களவாடல்
ஏசும் கண்களின் கடமை மீறல்
எக்களிக்கும் உயர்வின் உரிமை கோரல்
பட்ட மரத்தின் கிளை நுணுக்கங்களாய்
விட்டுத் தெறிக்கும் உணர்வுத் துணுக்குகள்
அத்தனைக்கும் மொத்தமாய்
தென்றலும் தேம்பியவாறு உறையும் மன இடுக்குகளில்
ஒளிப்பிழம்படிக்கும் நேரங்களில் நேசம் வார்க்கும்
அமுதமான அமைதி அமைக்கும்
ஆறுதல் அள்ளித் தெளிக்கும்
துன்பச் சுவடுகள் துடித்தழியும்.
இவையாவும்
இருட்டிய இருத்தலின்
ஒர் அமானுசிய அறையின்
சன்னல் கம்பிகளால் மட்டுமே.

ராணிதிலக் கவிதைகள்

தோல்வி

இன்று காலையில், என் கண்கள்,
அந்தச் சூரியனை வேட்டையாடின.
என் காதுகளின் மடிப்பில்,
அமர்ந்தபடி,
குயில்கள் பாடுவதும் தப்புவதே இல்லை.
அந்தப் பவழ மல்லியின் நறுமணம்
என் மூக்கை நோக்கியே மலர்ந்து கவிழ்கிறது.
என் விரல்கள் தீண்ட,
வெம்மையில், அக்கனி மேலும் பழுக்கிறது.
இக் கருத்த பாதை,
என் கால்களிலிருந்து விடுபட்டு ஓடுகிறது. அந்தியையும்
சாய்த்து, வீடு திரும்புகிறேன். அறையின்
இருள், நிழலெனத் தோன்றுகிறது
இன்றைய சாயுங்காலத்திலிருந்து,
வழக்கம் போலவே,
எப்போதும் போல்,
நிழல்களிடம் தோற்பவன் ஆகிறேன்.

இல்லை

என் முன்னால்
மழை பெய்கிறது
பெய்யும் மழைக்குப்
பின்புறம் இருக்கும் மலைக்கும் இது தெரியும்.
அது வலுத்துப் பெய்யும்போது
நீர்த்துளிகளையோ,
மலையையோ,
நாம் காண முடிவதில்லை.
அதன் கனக்கும் ஓசையில்,
நம்மின், மலையின் இறுக்கம் தளர்கிறது.
அப்போது
மலையுடன் நாமும் சேர்ந்து
கரைகிறோம் சட்டென, எதிர்
பார்க்காத மழை நிற்கிறது. நின்றபின்,
பார்க்கும்வேளை,
அங்கே மலை இல்லை.
மலையிலிருந்து காண,
அங்கே நான் இல்லவே இல்லை.

மைத்ரேயி கவிதைகள்

1. ஒரு நீண்ட பயணத்தின் போது அறிந்தேன்.
நினைவுகளில் என் வாழ்வு மூழ்கிக் கொண்டிருந்ததை
ஏழு ஜென்மத்தின் காலங்களை விழுங்கிக் கொண்ட
அந்தப் பயணம், அந்த மனிதர்கள், அந்தப் பார்வைகள்...
சொப்பனத்தில் வருவது போன்ற கரங்களுடைய
அவன் மற்றும் அவனது எழுத்து
அதில் ஒர் கணம் நான் பிறந்து வாழலாம்
அவன் எனக்காக ஏழு ஜென்மம் எடுப்பான்
நான் இன்புறுவேன் நான் அதில் வாழ்ந்து விடுவேன்
எனது இதயத்தை எனது உணர்ச்சியை
எனது அன்பை
குன்றின் மணிகளாகக் கோர்த்து
அவன் அணியக் கொடுத்தேன் வரலாற்றிற்காக
கடலெல்லாம் நிலமாக மாறும்
நிலம் எல்லாம் நீலம் பாய்க்கும்
நான் அதில் மூழ்கி விடுவேன்.
காய்ந்த சருகான காலம் அந்த வருகை
அவனது பொய்கள் அவன் செய்கை அந்தப் பார்வை
அந்த முகம் இருளை வரவழைக்கும்.
சூன்யம் நிiந்த அவனது வாழ்வு
சுற்றுச்சூழல் நண்பர்கள் அனைவரும்
தோன்றுவர் வீணடிக்க காலத்தை
நினைவு எனக்குள் தோன்ற
படைத்திருப்பேன் கவிதையாக அவனை.


2. இமைகளை மூடி விழித்திருக்கிறேன்
காலையில் புலரும் முன்
இருண்ட ஒளியைப் பரப்புகிறது வெளி என்னுள்
எனது நீண்ட மெல்லிய பயணம்
அழகிய சிற்பங்களை சுமந்த கற்களின் உயரம்
இறந்த மரங்களில் உறவாடிய உயிர்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது இவையனைத்தும்
அறுபது மணி நேர ஒலியைக் கேட்காததால்
எண்ண ஒட்டங்களை என்ன செய்வது
கண்களுக்குப் புரியவில்லை
கைகள் பதிவு செய்கின்றன
மரத்தின் இதழில் உயிர் பெறுகின்றன
எனது கவிதைகள்
இதயம் உருகியது நீராக அழுகையில்
நீரின் குமிழியில் அவனின் பிம்பம்
விரல் நுனியில் எடுத்துப் பருகினேன்
மணித்துளிகளாய் கரைந்து கொண்டிருக்கிறான்
ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன பயணங்கள்
எங்கள் தொடர்ச்சியில் இறக்கும் வருடங்கள்
ஒன்று இல்லாமல் போகும்.

வி.டி.ஜெயதேவன் கவிதைகள் -தமிழில்: யூமா வாசுகி

வகுப்பறை

இந்த நான்கு சுவர்களுக்குள்,
சன்னல் கதவுகள் அடைக்கப்பட்ட
சிறை அறைகளுக்குள் வரிசையாகப் போடப்பட்ட
பெஞ்சுகளுக்குக் கீழே
பிறர் அறியாமல்
சிறிய கால்களை
ரகசியமாக ஆட்டியாட்டிக்கொண்டு
எல்லாவற்றையும் ரசிக்கிறோம்
என்று சிரித்தும்
எல்லாம் புரிகிறது என்று
இடையிடையே தலையாட்டியும்
பாடங்களின் சிறையிலடைக்கப்பட்ட
இளம் வண்ணத்துப் பூச்சிகள்.
அடி வேரறுத்து
சிமெண்ட் சட்டியில் வரையறுக்கப்பட்ட கால
பராமரிப்பில்
பறித்து நடப்பட்ட மரங்கள்
வலையில் வீழ்ந்த கிளிகள்
எந்த தெய்வத்தைக் கண்டாலும்
மத்தகம் குனிந்து கால் மடக்கி
தும்பிக்கை உயர்த்தி வணக்கம் சொல்கின்ற
காடு மறந்துபோன
குட்டிப் பேரானைகள்

பகல் கனவு

வகுப்பறையில்
வாயைத் திறக்காதே என்று எரிகின்ற
கண்கள் முன்னால் எப்படியோ
கொண்டுவந்து உட்கார வைத்து அம்மா போனதும்
மனதின் சமையலறையில்
பதுங்கி நடந்து,
வாசலில் அலைந்து...
அதோ,
திருட்டுப் பூனை,
அம்மா விறகு எடுக்க
போன சமயம் பார்த்து
மீன் திருட வருகிறது.
கன்றுக்குட்டி
வேலியில் பாய்கிறது
சீதாப்பழ மரத்தின்
இலையடர் பசுமையில்
பச்சிலைக் குருவி கூக்குரலிடுகிறது...
மலைப்பாம்பு ஊர்ந்து ஊர்ந்து

தமிழில்: யூமா வாசுகி

பொதுப்புத்தி -கலாப்ரியா

பொதுப் புத்திக்காரனாய்
ஞாபகமறதியுடன்
போராடிக் கொண்டிருந்தேன்

பித்தளைப் பாத்திரத்தில்
பெயர் பொறிக்க வந்த
போது பழக்கம்

வீட்டின் பெயரை
கல் வில்லையில்
செதுக்கித் தந்து
காசு வாங்கிய கையோடு
வேற்றூர் சென்று விட்டவன்
பெயர் என்ன

அணை கட்டும் போது
இறந்த தொழிலாளிகளின்
அனைத்துப் பெயர்களையும்
பொறிக்க ஆரம்பித்த
தந்தையே காலமாக
முடித்துக் கொடுத்தவன் அவனாம்

பசு வலி கண்டரற்ற
வெளியேறும் பனிக்குடத்துள்
தெரியும் கன்றின் தலை போல்
கல்லுக்குள் அசாதாரணச் சிலை
காணும் சிறப்புப் புத்திக்காரன்தான்

துலங்கி வந்து கொண்டிருக்கும்
சிலைகளேனோ கடைசியில்
கொருவாய் விழுந்து போகுமென
நொம்பலப்பட்டுச் சொல்லிக்
கொண்டிருந்தான்

எந்தச் “சிற்பியின் நரகத்”தில்
எந்த மொழிக் காரர்களுக்காய்
என்ன வடித்துக் கொண்டிருக்கிறானோ
எழுதப் படிக்கத் தெரியாத அவன்.

ஸ்நேகிதன் கவிதைகள்

123 விளையாட்டு

நிபந்தனைகளற்ற இவ்வாட்டத்தில்
நாங்கள் 123 மட்டும் சொல்வோம்
நீங்கள் ஓட வேண்டும்
மரணத்தைத் துரத்த ஓடும் புல்லுண்ணியைப் போல
ஏறக்குறைய
உங்கள் சூழலும் அதுதான்
கொரில்லாவாய்ப் பதுங்கிப் பாய்ந்து
தொண்டைக் குழிகளைக் குதறவோ
சங்கிலிகளால் பிணைத்து
நகரவியலா உங்கள் சுயம் ரசிக்கவோ
உமிழ்ந்தே பழக்கப்பட்ட எங்கள் துப்பாக்கிகள்
உடல்களில் ரவைகளை நுழைக்கவோ
உங்கள் சனங்களின் குறிகளை
உங்களைக் கொண்டே அறுக்கப் பணித்தோ
எதுவும் நடக்கலாம்
நீங்கள் ஓடியாக வேண்டும்
நாங்கள் 123 மட்டும் சொல்வோம்

விதிமுறைகள் குறித்து
மாற்றுக் கருத்தேதுமிருந்தால்
வெள்ளை யோனிகளிலிருந்து
வழிந்த திரவம் தோய்ந்த
துணிகளைக் தருகிறோம்
வேண்டுமானால்
வாயில் கட்டிக் கொண்டு
போராடுங்கள்...
போராடுங்கள்...

கடல்கள்

மூதாதைகள் பயிற்றுவித்த ரகஸ்யம் சொல்லி
பசியாறிப் போகும் கடற்பறவைகளும்
முதுகில் மேயும் கலங்களின் புள்ளிகளும் நிறைந்த
காட்சிகள் நிறம் மாறும் கடல்கள்
ஆதியில் நிச்சலனத்தில் புதைந்திருந்தது
மௌனத்தின் கொடூர சுயம் சகிக்கவியலாது
வேட்கை கொண்ட தேடலின் உந்துதலில்
துடுப்புகள் வலிக்க வலிக்க
கயிறுகள் அவிழ்ந்து
ஓங்காரத்துடன் துவங்கியது
கரைகள் மீதான தேடல்கள்
சலித்து விடாத மீறல்கள்
பிறகொரு நாளில்
ஆழிருட்டுக்குள் புதைந்து போய் விட்ட
பேரமைதியின் மையம் தொட
ஒன்று கூடி தீர்மானித்த கோப்பைகள்
இன்றிரவுக்குள் கடல் குடிக்க வந்தன

பின் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
கடலுக்குள் கோப்பைககளும்
கோப்பைகளுக்குள் கடலும்

காலத்தின் சிலுவை

காலம் தன் தெருக்களில் என்னை
சாட்டையாலடித்தபடி இழுத்து வருகிறது
கந்தலாடையுடன்
படர்ந்த மணற்பரப்பில் குருதியிறைத்தபடி
கடந்த காலங்களின்
சிலுவையின் கணம் அழுத்த அழுத்தச் சரிகையில்
மண்குடுவையிலிருந்த தண்ணீரை
நாவுகளுக்கு வார்க்கிறாய்
காவற்காரனின் சவுக்கடிகளை ஏற்றுக் கொண்டவளாய்
நான் சிலுவையில் சார்த்தப்படுகிறேன்
பெருவிரல் நுனியிலிருந்து
மெள்ளத் தளர்ந்து
கண்களில் நிற்கிறது என் ஆத்மரசம்

நீ தண்ணீர் வார்க்கிறாய்

விடைபெறுதலுக்கான கையசைப்புகள்
அடக்கித் தோற்று பீறிடும் கண்ணீர்

மெல்லப் புதைகிறது இமைகள்
யுகாதி யுகங்களுக்கான பேரன்பை நிறைத்துக் கொண்டு

விழிப்பின் இரகசியம் -விழி.பா.இதயவேந்தன்

உறங்காமல் எப்போதும்
விழித்திருக்க நினைக்கிறேன் நான்.
நான் என்பது
பெயர் தாங்கியப் பலகை என்பதல்ல.
என் உயிர்கள் அடங்கிய
உடல், வீடு, உறவு...
என எல்லாம் தான்
என்னாலும்
என்னைச் சுற்றியும் வலைப்பின்னல்களாய்
வலம் வருகிறது பார்வையின் துகள்கள்.
விழிப்பின் இரகசியம்
அறிந்திருக்கவேண்டும் எவரும்
அறிஞர்கள், ஆன்மீகவாதிகளின்
விழிப்பு என்பது
அர்த்தங்கள் எல்லாம் வெவ்வேறானவை
கடும் சூழலில்
முட்டிமோதும் பிரச்சினைகளில்
இறுகிப்போய் கருகாமல்
வெளிச்சம் தேடி உடலென்பது
உறக்கம் கொள்ள மறுக்கிறது.
உறங்காமல் கிடப்பதைவிட
உறக்கத்திலும் தேவை விழிப்பு.

என்னை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள் -கர்ட் வொன்னெகட்: தமிழில்:சா.தேவதாஸ்

1973இல் அமெரிக்காவின் வடக்கு டகோடாவிலுள்ள ஒரு பள்ளியில், கர்ட் வொன்னெகட்டின் நாவல் “Slaughterhouse five” தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அப்பள்ளியின் நிர்வாகக்குழுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், புதினங்களில் வரும் பாத்திரங்கள் நடந்து கொள்வதையும், பேசும் விதத்தையும் விளக்குகின்றார் கர்ட் வொன்னெகட் (Kurt Vonnegut). அதிகாரத்தின் ஒடுக்குமுறையினையும், எழுத்தாளரின் சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டுவதற்கு இக்கடிதம் நல்லதொரு உதாரணமாகும்.

வொன்னெகட் மட்டுமல்லாமல், பெர்னார்ட் மலமூட், ஜேம்ஸ்டிக்கி, ஜோஸப் ஹெல்லர் போன்றோரின் நூல்களும் தொடர்ந்து பள்ளி நூலகங்களிலிருந்து தூக்கி எறியப்படுவதின் பின்புலத்தில், இக்கடிதத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.

They Shoot writers, Don’t They? Ed.by George Theiner Faber and Faber,
நூலிலிருந்து தமிழ் வடிவம்: சா.தேவதாஸ்


வடக்கு டகோடாவின் ட்ரேக்கிலுள்ள ஒரு பள்ளியில் அதன் வாயிற்காவலரால் என் நாவல் “Slaughterhouse five” நிஜமாகவே தீயிட்டுக் கொடுத்தப்பட்டது. அப்பள்ளி நிர்வாகக் குழுவின் அறிவுரைப்படி இது நிகழ்ந்தது. இந்நூலின் ஆரோக்கியமற்ற தன்மை குறித்து அக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது. விக்டோரியா மகாராணியின் தரநிர்ணயப்படி கூட, ஒட்டுமொத்த நாவலில் இடம்பெறும் ஆட்சேபணைக்குரிய ஒரே வரி இதுதான் “Get out of the road, you domb mother fucker”. அமெரிக்காவின் மாபெரும் தோல்வியாக அமைந்த, 1944ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த Battle of the bulge-ன் போது, அமெரிக்கப் புரோகிதரின் நிராயுதபாணியிலான உதவியாளரை நோக்கி, அமெரிக்கப் படைவீரன் ஒருவனால் பேசப்படும் வாசகம் இது. இந்த உதவியாளன் எதிரியால் சுடப்பட இருக்கிறான்.

எனவே, 16.11.1973இல் வடக்கு டகோட்டாவின் ட்ரேக்கின் சார்ல°ஸ்மக்கார்த்திக்குப் பின்வருமாறு எழுதினேன்.

‘அன்பான ,

“ட்ரேக் பள்ளி நிர்வாகக்குழுத் தலைவர் ஆக இருக்கும் உங்களுக்கு இக்கடிதத்தினை எழுதுகின்றேன். இப்போது புகழ்பெற்றுள்ள உங்கள் பள்ளிக் கொதிகலனில் அழித்தொழிக்கப்பட்டுள்ள புத்தகங்களின் ஆசிரியர்களுள் ஒருவன் நான்.

“உங்கள் நிர்வாகக்குழுவின் உறுப்பினர்களுள் சிலர், என் புத்தகம் தீங்கானது என்று குறிப்பிட்டுள்ளனர். இது என்னை அசாதாரணவகையில் அவமானப்படுத்துகிறது. உங்களைப் போன்றவர்களுக்கு புத்தகங்களும், எழுத்தாளர்களும் மிகவும் நிஜமற்றவர்களாக இருப்பதாக ட்ரேக்கின் செய்தி சுட்டிக்காட்டுகிறது. எந்த அளவுக்கு நான் நிஜமானவன் என்பதை நீங்கள் அறியும் பொருட்டு இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

“ட்ரேக்கிலிருந்து வரும் அருவருப்பூட்டும் செய்தியை ஈர்க்கும் விதத்தில் நானும் என் வெளியீட்டாளரும் எதனையும் செய்திருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். இந்தச் செய்தியால் எங்கள் புத்தகங்களை எல்லாம் விற்றுவிடமுடியும் என்று மார்தட்டிய படி நாங்கள் ஒருவரையொருவர் தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. தொலைக்காட்சியில் தோன்றுவதற்கு மறுதலித்திருக்கிறோம். தலையங்கப் பக்கங்களில் ஆவேசமான கடிதங்கள் எழுதியிருக்கவில்லை. நீண்ட பேட்டிகள் தந்திருக்கவில்லை. நாங்கள் கோபங் கொண்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டிருக்கிறோம் மற்றும் வருத்தப்படுகிறோம். இக்கடித நகல்கள் வேறுயாருக்கும் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

இப்போது உங்கள் கைகளில் இருப்பது ஒரே பிரதிதான். தம் பிள்ளைகளின் பார்வையிலும், உலகத்தவரின் பார்வையிலும், என் புகழினைப் பாழாக்கும் வகையில் நிறையவே செய்துள்ள, ட்ரேக்கின் மக்களுக்கான மிகவும் அந்தரங்கமான கடிதமாகும் இது. இக்கடிதத்தினை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டாகும் தைரியமும் கண்ணியமும் உங்களுக்குண்டா அல்லது இதுவும் உங்கள் கொதிகலனின் பிழம்புகளால் தீக்கிரையாக்கப்படுமா?

“இளைஞர்களின் மனங்களுக்கு நஞ்சூட்டி, பணம் பண்ணி அனுபவிக்கின்ற எலிபோன்ற நபர்கள் நாங்கள் என்று எங்களைக் கற்பிதம் செய்து கொள்வதை, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிச் செய்திகளிலிருந்து தெரிந்து கொள்கிறோம். சிறுவனாக இருந்தபோதே, கனமான கருவிகளைக் கையாண்டு பண்ணை வேலைகள் செய்த, திடசாலியான 51 வயது நபர் நான். என்னுடைய மூன்று பிள்ளைகளையும், மூன்று வளர்ப்புப் பிள்ளைகளையும் சேர்த்து வளர்த்துள்ளேன். அவர்கள் அனைவரும் நன்றாக உருவாகியுள்ளனர். அவர்களில் இருவர் விவசாயிகள். நான் இரண்டாம் உலகப்போரின்போது, தரைப் படையில் போரிட்டு, விருது பெற்றுள்ளவன். நான் பெற்றிருப்பவை கடும் உழைப்பால் ஈட்டியிருப்பவை. எதன்பொருட்டும் கைது செய்யப்பட்டிருக்கவோ, வழக்குத் தொடரப்பட்டிருக்கவோ கிடையாது.

“இளைஞர்கள் என்னைப் பெரிதும் நம்புகிறார்கள்; அயோவா, ஹார்வர்ட் பல்கலைகழகங்கள் மற்றும் நியூயார்க்கின் சிட்டி காலேஜ் ஆகியவற்றில் பணியாற்றிள்ளேன். ஒவ்வொரு வருடமும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் தொடக்க விழாவில் பங்கேற்க, குறைந்த பட்சம் ஒரு டஜன் அழைப்பிதழ்கள் வருகின்றன. வேறெந்த அமெரிக்கப் புதின எழுத்தாளருடையதை விடவும், எனது புத்தகங்கள் அதிகப்படியாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

“என் புத்தகங்களை வாசிக்க நீங்கள் சிரமம் எடுத்துக் கொண்டால், கல்வி கற்றவர்கள் நடந்து கொள்வது போல் நடக்க முயன்றால், அவை ஆபாசமானவை அல்ல என்பதை அறிந்து கொள்வீர்கள்; எவ்விதமான காட்டுத்தனமும் இருக்கிறதென்று வாதித்திட மாட்டீர்கள். மக்கள் மிக அன்பாகவும், அதிகப் பொறுப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றே அவை மன்றாடுகின்றன. சில பாத்திரங்கள் முரட்டுத்தனமாய் பேசுவது உண்மையே. ஏனெனில் நிஜ வாழ்வில் மக்கள் முரட்டுத்தனமாய் பேசுகின்றனர். குறிப்பாக சிப்பாய்களும் கடினவேலை பார்ப்போரும் முரட்டுத்தனமாய் பேசுகின்றனர். மிகவும் பாதுகாப்பாயுள்ள நம் குழந்தைகளுக்குக் கூட இது தெரியும். இவ்வார்த்தைகள் சிறுவர்களை அதிகம் பாதிப்பதில்லை என்பது நமக்கும் தெரியும். நாம் சிறுவர்களாய் இருந்தபோது அவை நம்மைப் பாதிக்கவில்லை. நம்மைப் பாதிப்பவை கெட்ட காரியங்களும் பொய் சொல்வதும்தான்.

“இவ்வளவு எடுத்துரைத்த பின்பும், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் முனைப்பாக இருப்பீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்: “சரிதான், ஆனால் சிறுவர்கள் என்ன புத்தகங்களை படிக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எங்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும்.” ஆனால், கடுமையும், அறியாமையும் அமெரிக்கத் தன்மை அற்றதுமான வழியில் அந்த உரிமையைப் பிரயோகித்து, அந்தப் பொறுப்பினை நிறைவேற்றினால், மக்கள் உங்களை மோசமான பிரஜைகளும் முட்டாள்களும் என்றழைப்பர். உங்கள் குழந்தைகள் கூட அவ்விதம் அழைத்திடும் உரிமை பெற்றிருப்பர்.

“நீங்கள் செய்திருப்பது குறித்து நாடெங்கிலும் எழுந்துள்ள கூச்சல் - குழப்பத்தால், உங்கள் மாணவர் சமூகம் குழப்பமுற்றுள்ளதாகப் பத்திரிக்கைகளில் வாசிக்கிறேன். நல்லது, ட்ரேக் என்பது அமெரிக்க நாகரீகத்தின் ஓரங்கம் என்பதையும், இவ்வளவு அநாகரிகமாக நீங்கள் நடந்து கொண்டுள்ளதை சக அமெரிக்கர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை என்பதையும் நீங்கள் கண்டறிந்துள்ளீர்கள். புத்தகங்கள் என்பவை நல்ல காரணங்களினால் சுதந்திரமானவர்களுக்கு எரியூட்டும் தேசங்களுக்கெதிராக யுத்தங்கள் நிகழ்த்தப் பட்டிருக்கின்றன என்பதை இதனின்றும் நீங்கள் அறியக்கூடும். நீங்கள் ஓர் அமெரிக்கர் எனில், உங்களுடைய கருத்துக்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கருத்துக்களும் சுதந்திரமாகப் பரவிட அனுமதித்தாக வேண்டும்.

“இளைஞர் தம் கல்வி குறித்து உங்கள் அதிகாரத்தைப் பிரயோகிக்கும்போது, நிஜமாகவே உங்களிடத்தே ஞானமும் முதிர்ச்சியும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டிட, நீங்களும் உங்கள் நிர்வாக்குழுவும் தீர்மானகரமாக இருப்பின், புத்தகங்களை நிந்திப்பது மற்றும் எரியூட்டுவது என்றும் மோசமான பாடத்தைச் சுதந்திரமான சமூகத்திலுள்ள இளைஞர்களுக்கு கற்பித்தீர்கள் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

உங்கள் குழந்தைகள் சிறந்த முடிவுகளை எடுத்து உயிர்த்திருக்க வேண்டுமானால், எல்லாவிதமான அபிப்பிராயங்களும் தகவல்களும் அவர்களுக்குப் பரிச்சயமாயிருக்க வேண்டும் என்றும் நீங்கள் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். “திரும்பவும் கூறுகிறேன். என்னை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள், நானொரு நல்ல பிரஜை மற்றும் மிகவும் நிஜமானவன்.”

இது ஏழாண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. இது வரையிலும் எந்தப்பதிலும் இல்லை. நியூயார்க் நகரத்திலிருந்து இதனை நான் எழுதும் வேளையில் “Slaughterhouse fivef” பல பள்ளி நூலகங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய சட்ட ரீதியிலான யுத்தம் இன்னும் குமுறிக்கொண்டிருக்கிறது. முதலாவது சட்டத் திருத்தத்தை மூர்க்கமாக எதிர்க்கின்ற வழக்குரைஞர் களை இப்பள்ளி நிர்வாகம் அமர்த்தியுள்ளது. முதலாவது சட்டத்திருத்தத்தை எதிர்க்கின்ற வழக்கு ரைஞர்களுக்குப் பஞ்சமே கிடையாது - அது என்னவோ, குறுக்குப் புத்தியுள்ளவனின் குத்தகை ஒப்பந்தத்தில் இடம்பெறும் வாசகத்திற்கு மேல் ஒன்றுமில்லை என்பது போல.

 மஞ்சள் காமாலை தடுப்பூசி திணிப்பு அரசு/மருத்துவர்களின் காமாலை பார்வையின் விளைவே -மருத்துவர் வீ.புகழேந்தி

குறிப்பிட்ட ஒரு வியாதியால் ஒரு நாட்டில்/ இடத்தில் அதன் பாதிப்பு/இறப்பு விகிதம் அதிகம் இருக்குமானால், தடுப்பூசியின் காரணமாக, அது உறுதியாக தடுக்கப்படும் என்ற விஷயம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்தால், அவ்வியாதியை தடுக்க செலவு குறைந்த மாற்று வழிகள் இல்லை என இருக்கும் சமயத்தில் மட்டுமே தடுப்பூசியை பயன் படுத்தி வியாதி வராமல் காப்பது நன்மை பயக்கும்.

நம் நாட்டில் மஞ்சள்காமாலை தடுப்பூசியை அமுலுக்கு கொண்டுவர, அரசு/மருத்துவர்கள்/மருந்துக் குழுமங்கள் சொல்கின்ற காரணம்.

1. இது ஒரு ஆட்கொல்லி வியாதி.
2. இதன் பாதிப்பு மக்களிடையே மிகவும் அதிகம். 10 சதவீதம் மக்கள் மஞ்சள் காமாலை நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
3. இந்நோய் பாதிப்பின் காரணமாக ஈரல் முழுவதும் பாதிக்கப்பட்டு இறப்பு நிகழ்வது.
4. இந்நோய் காரணமாக ஈரல் புற்றுநோய் பாதிப்பால் பலரும் இறப்பது.
5. இந்த தடுப்பூசி நம்பகமானது, பாதுகாப்பானது... போன்றவை.

இனி இவை உண்மைதானா? மக்கள் நலன்தானா? இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்துவதற்கு காரணம்? போன்றவற்றை ஆராய்ந்து பார்க்கலாம்.

People for Economical and Effective Medicare (PEEM) என்னும் இயக்கத்தைச் சேர்ந்த ஹைதராபாத் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் திரு. பா°கர் ராவ் என்ன சொல்கிறார் என பார்ப்போம்.

ஆட்கொல்லி, கொள்ளை நோயாக இருக்கும் பட்சத்தில் மட்டும் (அல்லது) கொள்ளை நோயாக உருவாகக் கூடிய அபாயமுள்ள வியாதிகளுக்கு எதிராக மட்டுமே தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும். இந்தியாவைப் பொறுத்த மட்டில் இது கொள்ளை நோயாகவோ (அ) உருவாகவோ வாய்ப்பு இல்லை என்பதை இருக்கின்ற புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது ஆட்கொல்லி வியாதி என்பதும் உண்மைக்கு புறம்பானது. இவ்வியாதியால் பாதிக்கப் பட்ட பெரும்பாலோர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுகின்றனர். இவ்வியாதி பற்றிய உலகின் மிகச்சிறந்த வல்லுநர் திருமதி Dr. ஷீலா செர்லாக் கூறுவது.

“மஞ்சள் காமாலை ஏற்படுத்தும் இக்கிருமிகள் (Hepatitis ‘B’ Virus) 100 பேர் உடம்பில் உட்புகும் போது 95 பேருக்கு அதன் உடனடி தாக்கம் (Acute Infection) தெரியும். அதில் 94 பேர் தானாகவே இயல்பு நிலைக்கு திரும்பி விடுவர். இவ்வியாதியால் பாதிக்கப்பட்ட 1% கீழானவர்களுக்கே இறப்பு நிகழும் போது இதை எப்படி ஆட்கொல்லி வியாதி என அழைக்கமுடியும்.”

இந்தியாவைப் பொறுத்தவரை இவ்வியாதியின் உடனடித்தாக்கத்திற்கு ஆளானவர்கள் குறித்தான புள்ளி விபரங்கள்/ஆய்வுகள் இல்லை. இக்கிருமித் தாக்கத்தின் காரணமாக பாதிப்பு ஏதும் சிறிதளவு இல்லாமலும், ஆனால் அதே சமயம் இக்கிருமியை பிறருக்கு பரப்பக்கூடிய தன்மை கொண்டவர்கள் (Carriers) பற்றிய ஆய்வு/புள்ளி விபரங்கள் மிகவும் சிறிதளவில் உள்ளன. இவ்வாய்வுகளில் நோய் சுமப்பவர்கள் (careers) 1.62 – 4% எனத் தெரிய வந்துள்ளது. அதிலும் 1% இவ்வியாதியின் தீவிர பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஆக விஷயம் இப்படி இருக்க ஆந்திர மாநிலத்தில் அனைத்து குழந்தைகளுக்கும். (4.5 லட்சம் குழந்தைகள்) - Bill Gates Foundation உதவியுடன் கிடைத்த இத்தடுப்பூசிகள் போடுவது தேவைதானா? கொழுத்த வியாபாரியான பில் கேட்ஸ்கு ஆந்திரக் குழந்தைகள் நலன் மீதுதான் அக்கறையா? அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்படுவது, அவ்வூசிகளின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் அந்தக் குழந்தைகள் மீது இல்லாத கரிசனம், பில்கேட்ஸ்கு ஆந்திரக்குழந்தைகள் மீது மட்டும் எழக் காரணமென்ன? இத்தடுப்பூசியின் காரணமாக எழும் பின்விளைவுகளுக்கு ஆந்திர அரசே பொறுப்பேற்க வேண்டும்.

இந்தியாவிலேயே நல்ல, தரமான மஞ்சள்காமாலை தடுப்பூசி குறைந்த விலையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்ற இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வாங்குவதற்கு பதிலாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் விலை உயர்ந்த மருந்துக் குழுமத்தில் இருந்து வாங்கி ஆந்திர குழந்தைகளுக்கு கொடுப்பது, வெளிநாட்டு மருந்து குழுமத்தின் வணிக நலனை கருத்தில் கொண்டு ஆந்திரக் குழந்தை களை சோதனை விலங்குகளாக மாற்றுவதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.

(வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் தடுப்பூசித் திட்டங்களே இந்திய குழந்தைகளை பரிசோதனை விலங்குகளாக மாற்றும் நோக்கத்துடனேயே உள்ளதை UNICEF அஸ்ஸாமில் செய்த ஆய்வில் 15 குழந்தைகள் (போலியோவில்) இறந்ததையும், கேரளாவில் திருவனந்தபுரத்தில் புற்றுநோய் ஆய்வில் ஏற்பட்ட பிரச்சினைகளையும், சமீபமாக ஹைதராபாத்தில் மரபணு மாற்றத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்துகளை பெரியவர்களுக்கு கொடுத்து சோதனை செய்ததில் 7 பேர் இறந்ததையும், இதே போல் பெங்களூருவில் மரபணு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மருந்தினை (இரண்டிலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள்/அமைச்சகம் இருந்து அனுமதி பெறாமலே) பரிசோதித்தது குறித்து வழக்கு (PIL) தொடரப்பட்டிருப்பதையும், Glaxo மருந்து நிறுவனம் கிறித்துவ மடங்களின் உதவியோடு அனாதை குழந்தைகளிடத்து AIDS மருந்தின் பின் விளைவுகளை அனுமதி பெறாமலே சோதித்தும் - மக்கள் மீது இவர்கள் கொண்டுள்ள அக்கறையை தோலுரித்து காட்டியுள்ளது.) மேலும், மஞ்சள் காமாலை நோயின் பாதிப்பு 10% மக்களுக்குள்ளது எனும் தவறான புள்ளிவிபரத்தை அரசு/மருத்துவர்கள்/மருந்துக்குழுமங்கள் சொல்ல காரண மென்ன? மக்கள் நலனா? வணிக நலனா?.

Arre Z Zuckerman எனும் புகழ்பெற்ற மருத்துவர் எழுதிய புத்தகத்தில் (பக்கம் 545) மஞ்சள் காமாலையின் (Hepatitis ‘B’ Virus) காரணமாக பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் (90%) தானாகவே இயல்பு நிலைக்கு திரும்புவர் என்பதும் 1% கீழ் தான் பாதிப்பு மோசமாக இருப்பதும் உள்ளது. இதன் காரணமாக American Public Health Service (USPHS) American Academy of Paediatrics (ARP) இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவில் 1997ல் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்க வேண்டும் எனும் ஆணையை திரும்ப பெற்றுள்ளது. அதே வருடம் Communicable Disease Control (தொற்று நோய் தடுப்பு அமைச்சகம்) and Epidemiology of US Federal Government நிறுவனமும் மஞ்சள் காமாலை பாதிக்கப்படாத தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட வேண்டும் என்பதையும் திரும்ப பெற்றுக்கொண்டது.

US Federal Government மஞ்சள் காமாலையால் கருவுற்ற பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது மட்டும் (Hbs Ag Positive) பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் பரவலாம் என்பதற்காக, அக்குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி கொடுக்கலாம். மீதிக்குழந்தைகளுக்கு இது தேவையில்லை. ஏனெனில் இந்நோய் பெரும்பாலும் பெரியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடிய நோயாக உள்ளதால் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசியால் பலன் அதிகம் இல்லை.

இனி மஞ்சள் காமாலை (Hepatitis ‘B’) குறித்து உலக வல்லுநர்களின் கூற்றை பார்ப்போம்.

1. சிறு குழந்தைகளுக்கு (1 வயதிற்கு கீழ்) மஞ்சள் காமாலை தொற்றும் வாய்ப்பும் 1-3% (Us Department of Public Health1996)

2. கருவுற்ற பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலொழிய பிறக்கும் குழந்தைகளுக்கு இந்நோய் தொற்றும் வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதனால் US Federal Authorities அனைத்து குழந்தைகளுக்கும் இது கொடுக்க வேண்டிய தேவையில்லை (1999ம் ஆண்டு அறிக்கை)

3. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட பெரும்பாலும் முடியாத பிறந்த குழந்தைகள்/சிறு குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி தேவையில்லாமலே கொடுக்கப்படுகின்றது. (Pat Griggin Mackie)

4. இந்த தடுப்பூசியால் எவ்வளவு காலம் பாதுகாப்பு கிடைக்கும் என்பதும், பாதுகாப்பை பெருக்க கூடுதல் ஊசி தேவையா என்பதும் தெளிவாக இல்லை. (National Vaccine Information Center- USA. Harrison’s Principles of Internal Medicine).

5. மஞ்சள் காமாலை நோய் கண்டு, அதிலிருந்து விடுபட்டவர்கள் வாழ்க்கை முழுக்க அந்தநோய் திரும்ப தாக்காத அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாக்கப்படுகின்றது. (Robbin’s Pathologic Basis of Disease 1994)

6. சிசு கருப்பையில் இருக்கும் காலத்திலே பாதிப்பு ஏற்பட்டு பிறக்கும் போது HBs Ag Positive இருந்தால் இத்தடுப்பூசியால் எந்த ஒரு பயனும் இல்லை. Zucker Man 1993.

7. ஏற்கனவே ஒருவர் Carrier ஆக இருந்தால் அவருக்கும் இந்த தடுப்பூசியால் ஒரு பயனும் கிடையாது. (National Drug Bulletin 2001).

8. 1987ல் மரபணு மாற்ற தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இத்தடுப்பூசியின் திறன் குறித்து தெளிவான விளக்கம் இல்லை. மேலும் குழந்தை பருவத்தில் கொடுக்கப்படும் இவ்வூசி எவ்வளவு காலம் பாதுகாப்பு கொடுக்கும், அவர்கள் பெரியவர் களாக வளர்ந்த பருவத்திலும் பாதுகாப்பை கொடுக்குமா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. குழந்தைகள் மீது பரிசோதிக்கவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. (Morbidity and Mortality Report Jan.1997)

9. 14 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இத்தடுப்பூசி கொடுத்தால், அவர்களுக்கு நோய் தடுப்பைக் காட்டிலும் இவ்வூசியின் பின் விளைவுகள் காரணமாக இறப்போ/பிற பின் விளைவுகளோ ஏற்படுவது 3 மடங்கு அதிகமாக உள்ளது. (Association of American Physicians and Surgeons, Dr.Jane Orient 08.07.1999)

10. அமெரிக்காவில் கட்டாயப்படுத்தப்படாத ஒரு தடுப்பூசியை, அங்கு விற்க முடியாத/கடினமான, தேவைக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட தடுப்பூசியை வளரும் நாடுகளின் கையில் திணித்து, பரிசோதனை விலங்குகளாய் மாற்றுவது மட்டு மின்றி/இலாபமும் அரசு/மருத்துவர்கள்/ மருந்துக் குழுமங்களின் துணையோடு சம்பாதிக்க நினைப் பதை என்னவென்று சொல்லுவது. பில்கேட்ஸின் கரிசனம் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

இந்தியா போன்ற ஏழை (ஆக்கப்பட்ட) நாடுகளில் தடுப்பூசியின் பின் விளைவுகளை ஆராய தொடர் ஆய்வு (Followup) செய்யப்படாமல் போவதால் இத்தடுப்பூசியினால் ஏற்படும் பிரச்சினைகளும் பின் விளைவுகளும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. எனினும் பிற நாடுகளிலிருந்து கிடைக்கும் ஆதாரங்களையாவது நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

நியூசிலாந்தில் மஞ்சள்காமாலை தடுப்பூசி திட்டத்திற்கு பின் அங்கே சர்க்கரை நோயால் (Diabetes) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது. Newzealand Medical Journal 24.05.1995.

Dr. Philip Incao, Ohio House of Representative Columbus Ohio முன் கொடுத்த வாக்குமூலத்தில் 1987ம் ஆண்டு முதலே பல மருத்துவ உலக ஆய்வுகளில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக நாட்பட்ட (Chronic) தன் நோய் எதிர்க்கும் திறனை தானே அழிக்கும் வியாதிகள் (Auto Immune Disorders) நரம்பு மண்டலங்களை பாதிக்கும் (Neurological) வியாதிகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்படும் எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.

மஞ்சள் காமாலை தடுப்பூசியின் மோசமான பின் விளைவுகளை அறிய மே 1999ல் US Senate Congressional Hearing by its Subcommittee ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் 81 புகழ்பெற்ற இது குறித்தான மருத்துவ கட்டுரையிலிருந்து Dr. Buston A Wais Bren என்பவர் பட்டியலிட்டு பின்வருவனவற்றை கூறுகிறார். அவை.

1. Convulsion (வலிப்பு நோய்)
2. Bell’s Palsy (முக ஜன்னி)
3. Lumbar Neuro Pathy (இடுப்பு, நரம்பு வலி)
4. Optic Beuritis (கண்பார்வை பாதிப்பு)
5. Transverse Myelitis (தண்டுவட பாதிப்பின் காரணமாக கை, கால் வாதத்தால் பாதிக்கப்படுவது.)
6. Polyneuropathy (பல நரம்புகள் பாதிக்கப்படும்).
7. Myasthenia Gravis (தசைகளை தளர்த்தி பாதிக்கும் நோய்) அமிதாப்பச்சன் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார். விஷயம் இப்படி இருக்க தடுப்பூசி விளம்பரம்/பணம் போன்றவற்றிற்கு அவர் ஆசைப்படுவதை என்னவென்று அழைப்பது?
8. Demyelination (நரம்பு உறைகள் பாதிக்கப்படுதல்)
9. Multiple Sclerosis (மூளை,பிற நரம்பு மண்டலங்களை பாதிக்கும் ஒரு வகை நோய்)
10. Guillion Barre Syndrome (நரம்புகளை பாதிக்கும் நோய்)
11. Encephalitis (மூளைக் காய்ச்சல்)
12. Uvetis (கண்களை பாதிக்கும் நோய்)
13. Rheumatoid Arthritis (மூட்டுகளை பாதிக்கும் நோய்)

இவை அனைத்தும் உலக மருத்துவ ஏடுகளில் மறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட விஷயங்கள். பல இறப்புகளும் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் Nicholas, Lyla Rose, Mathew... போன்ற பல ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இணைய தளத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் பாதிப்பு 1000 பக்கங்களை எளிதில் தாண்டும்.

இவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பாதிப்புகள் என்றால், ஏற்றுக்கொள்ளப்படாத பாதிப்புகள்?

ஆக தீவிர மஞ்சள்காமாலை தடுப்பூசித்திட்டத்தை கைவிட்டு தேவைப்படுபவர்களுக்கு மட்டும் அதனைக் கொடுப்பது சிறந்தது. அயோடின் சத்துக் குறைவு உள்ள இடங்களில் மட்டும் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்துவது நல்லது. எல்லோரும் அயோடின் கலந்த உப்பைத் தான் உட்கொள்ள வேண்டும் என்பது சரியில்லாதது).

Hepatitis B Virus காரணமாக ஏற்படும் மஞ்சள் காமாலை பாதிப்பு பெரும்பாலும் பெரியவர்களுக்கு (Adults) என்றிருக்க, ஒட்டு மொத்தமாக குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி கொடுப்பது நல்லதன்று.

மாற்று:

அரசானது கருவுற்ற அனைத்துப் பெண்களையும் மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என அறிய Hbs Ag பரிசோதனை செய்வது மட்டும் நல்லது. பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களின் (Hbs Ag Positive) குழந்தைகளுக்கு மட்டும் இத்தடுப்பூசி போடுவது நல்லது. இது பாதுகாப்பானது, விலையும் குறைவு, தேவையற்று அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுப்பது தவிர்க்கப்படுகிறது. மேலும் இத்தடுப்பூசிகளை நம்மூரிலே தயாராகும் தரம் நிறைந்த குறைந்த விலையில் கிடைக்கும் மருந்துக் குழுமங்களிடமிருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், யாருக்குக் கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

கொடுக்கக்கூடாதோர் பட்டியல்

1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படாத (Hbs Ag Negative) கருவுற்ற பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள்.

2. Hbs Ag Positiveகுழந்தைகளுக்கு

3. முழு வளர்ச்சி இல்லாத குறைப்பிரசவ குழந்தைகளுக்கு (Premature born Children)

4. சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டு எடை குறைவான குழந்தைகள் (Malnourished and undernourished Children

5. இரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் (Anemic Children)

6. அதிக சளித்தொல்லையால் (Respiratory infection) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு

7. ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு (Children with History of Allergy)

முக்கிய பிரச்சனை என்னவெனில் பெற்றோர் அனுமதியின்றி (Informed Consen) பெரியவர்களுக்கும் ஒப்புதல் இன்றி (அதன் சாதக/பாதங்களை விளக்கிய பின்னரும்?!) யாருக்கும் இதைக் கொடுக்க கூடாது. இது “உரிமை மீறல்” பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். விஷயம் தெரிந்து கொள்வது (Right to correct) சாதக/பாதகங்களை (விளக்கப்பட்டால் தானே?) தெரிந்த பின்னர் தன் உடல் நலன் குறித்தான முடிவெடுக்கும் உரிமைகள் நோயாளிகள்/மக்கள் தெரிந்து பின்பற்றுவது முக்கியமானது. குறிப்பாக இந்தியாவில் பலரும் சத்துகுறைவால் பாதிக்கப்பட்டு, எடைக் குறைந்தும், இரத்த சோகையால் பாதிக்கப் பட்டும் இருக்கும், தற்போதைய சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி என்பது கொஞ்சம் கூட பொருந்தாத ஒன்று.

யார் யாருக்கு இத்தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும் என (CDC-USA) வரையறுத்ததைக் காண்போம்.

1. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களுக்கு (Hbs Ag Positive) பிறக்கும் குழந்தைகளுக்கு

2. விபரீதமாக Hbs Ag இரத்தம் ஒருவர் உடம்பில் கலக்கும் (இது பரிசோதிக்காத இரத்தம் ஒருவர் உடம்பில் ஏற்றுகையில் இதன் பாதிப்பு வரலாம்)

3. Hbs Ag Positive உள்ள ஒருவரிடத்து உடலுறவு கொள்ளும்போது இதன் பாதிப்பு ஏற்படலாம்.

4. குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு மஞ்சள் காமாலையின் பாதிப்பு (Acute Hepatitis B Infection) இருக்கையில் அக்குடும்பத்திலுள்ள 1 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு அதன் பாதிப்பு ஏற்படலாம் என்பதற்காக கொடுக்கலாம்.

அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்பட வேண்டும். மஞ்சள் காமாலை தடுப்பூசியை பொறுத்தவரை மருத்துவர்களால்/மருந்து குழுமங்களால் உருவாக்கப்படும் தேவையற்ற, பொய்யான மாய வலையில் சிக்காமல் இந்நோய் பரவ முக்கிய காரணமாக நீர், இரத்தம்/இரத்தப்பொருட்கள் ஒருவருக்கு ஏற்றுகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உரிய பாதுகாப்புகள், பொதுவான நோய் எதிர்ப்பு சக்தியை அனைத்து மக்களும் பெற, அனைவருக்கும் (குறிப்பாக ஏழைகளுக்கு) அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் திட்டங்கள் (அனைவருக்கும் உரிய இடம், உண்ண சத்தான உணவு (வறுமை நீங்கி) அனைவருக்கும் வேலைப்பாதுகாப்பு, நிரந்தர வேலை, தொழிலாளர் உரிமை பாதுகாக்கப்படல்), உடுக்க உடை, பாதுகாக்கப் பட்ட குடிநீர் கிடைக்கச் செய்வதே நிரந்தர தீர்வை நோக்கிய பாதையாக அமையும். தடுப்பூசிகளை விடவும் இவை முக்கியமானவை. நீண்ட கால, நிரந்தர தீர்வைப் பற்றியான கண்ணோட்டத்துடன் பார்த்தால் அவை செலவு குறைந்து இருப்பது தெளிவாக புரியும்.

தடுப்பூசி/மருந்தின் சாதக பாதங்களை விளக்கி, பின் மக்கள்/நோயாளிகள் கொடுக்கும் ஒப்புதல் (iகேடிசஅநன உடிளேநவே) இல்லாமல் குழந்தைக்கோ/பெரியவருக்கோ தடுப்பூசி கொடுத்தால், அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு சட்டப்படி மருத்துவர்களும், மேலும் அத்தடுப்பூசியை உயர்த்திப் பிடிக்கும் மருந்து உற்பத்தி யாளர்களோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களோ, ஏன் அரசோ பொறுப்பேற்க வேண்டும்.

மஞ்சள் காமாலை ஆட்கொல்லி தடுப்பூசியை தவிர்க்கவும்

By Barry Forbes The Tribune/ Thomson News paper, Sunday Feb 07, 1999 “Who is calling the shots” நிகழ்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகள், பாதிப்பு காரணமாக அது கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. அதில் பிரான்ஸ் நாட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட “Hep B” மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டம், அவ்வூசி “Multiple Sclerosis” எனும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியை ஏற்படுத்தியதின் விளைவாக நிறுத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மஞ்சள் காமாலை தடுப்பூசியின் விளைவாக Multiple Sclerosis என்னும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வியாதியால் பாதிக்கப்பட்டதால், UK Smithkline Beechem நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற முடிவு அவ்விருவருக்கும் அந்த மருந்து குழுமம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

கனடா நாட்டில் 18,000 நான்காம் வகுப்பை சேர்ந்த மாணவர்களைக் காக்க Manitoba என்னுமிடத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மஞ்சள் காமாலை தடுப்பூசி பின் விளைவுகள் காரணமாக நீதி கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளனர். Wyoming, Newhampshire, Illinois (USA) போன்ற பிற மாநிலங்களிலும் பெற்றோர் இத்தடுப்பூசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 1990-1998 -க்கு இடைப்பட்ட காலத்தில் 17,497 பேர் காமாலை தடுப்பூசியின் பின் விளைவுகளால் ( Adverse Reactions) பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் 5,983 பேர் உயிரை பாதிக்கும் அளவிற்கு, மருத்துவமனையில் அவசியம் சேர்ப்பதற்கு, நிரந்தர உடல் ஊனத்திற்கோ, இறப்பு... முதலியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1999-ல் 0-1 வயது அமெரிக்க குழந்தைகளில் 54 பேருக்கு மட்டுமே அந்நோயின் தாக்கம் தென்பட்டுள்ளது. ஆனால் அதே வருடத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3.9 மில்லியன். 1 வயதிற்கு கீழான குழந்தைகளின் பாதிப்பு விகிதம் 0.001%. இது மிக, மிகக் குறைவு. அதனால் அங்கு தடுப்பூசி கட்டாயமயமாக்கப்படவில்லை.

Who wins? அமெரிக்க பொதுமக்களே இத்தடுப்பூசி திட்டத்தின் காரணமாக பணரீதியாகவும்/பிறரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலனடைந்திருப்பது the foxes in charge of the henhouse-Merch, Smithkline beechem எனும் பெரும் மருந்துக் குழுமங்கள் தான். அமெரிக்க சட்டப்படி, தடுப்பூசியின் பின் விளைவுகளுக்காக இவ்விரு மருந்து நிறுவனங்களையும் நீதி மன்றத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது. Merch நிறுவனத்திற்கு மட்டும் இத்தடுப்பூசி விற்பனையின் விளைவாக கிடைக்கும் ஒரு வருட பணம் 1 பில்லியன் டாலர்கள் ஆகும்.

Dr.Bonnie Dunbar - செல்களில் (cell) ஏற்படும் மாற்றங்கள் குறித்தான ஆய்வில் மிக முக்கியமானவர். மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கு பிறகு பலரும் இறப்பு உட்பட மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர், எனத் தெளிவாக கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் 140-320 பேர் தான் மஞ்சள் காமாலை (Hepatitis ‘B’ Virus) காரணமாக இறக்கின்றனர்.

15,000 பிரஞ்ச் குடிமக்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசிக்கெதிராக அரசு மீது தொடர்ந்த வழக்கின் காரணமாக பின் விளைவுகள் இருப்பதை அரசு ஒப்புக் கொண்டு அக்டோபர் 1998ல் பிரஞ்ச் சுகாதார அமைச்சகம் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொடுத்து வந்த மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தை கை விட்டது. National Vaccination Information center கணக் கெடுப்புபடி அமெரிக்காவில் 1996ல் மட்டும் 14 வயத்திற்கு கீழ் 872 பேர் காமாலை தடுப்பூசி காரணமாக, மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 13 இறப்புகளும் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவில் திரு. பாஸ்கரராவிற்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி பாதிப்பின் காரணமாக 70 பேர் தொலைபேசி செய்ததாகவும், 2 இறப்புகள் நிகழ்ந்ததாகவும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆகஸ்டு 2004ல் சேலத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுத்து பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி உள்ளது. கல்பாக்கம் அருகில் சதுரங்கப்பட்டினம் குப்பத்தைச் சேர்ந்த திரு. கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தீபனுக்கு (தற்போது வயது 5) மஞ்சள் காமாலை தடுப்பூசியின் காரணமாக வலிப்பு நோய் வந்துள்ளது.

1990ல் இங்கிலாந்தில் 598 மருத்துவர்களை உள்ளடக்கிய ஆய்வில் 50% மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட மறுத்துள்ளனர். அரசு மருத்துவர்களுக்கு இந்நோய் பரவும் அபாயம் இருப்பதை சுட்டிக் காட்டியும் 50ரூ மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். (British Medical Journal 27.01.1990).

மஞ்சள் காமாலை தடுப்பூசியானது, மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவரின் இரத்தத்திலிருந்து தயாரிக்கப்படுவதால் (அவர்களுக்கு AIDS வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதால்) ஊசி போடப்படுபவர்களுக்கும் AIDS தொற்றும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்காவில் மஞ்சள் காமாலை தடுப்பூசித் திட்டத்தின் விளைவாகவே AIDS திட்டமிட்டு பரப்பப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் தான் அமெரிக்காவில் முதலில் மஞ்சள் காமாலை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அங்கு தான் AIDS தாக்கம் அதிகம் இருந்ததாக ஆதாரங்கள் உள்ளன.

பெரும்பாலான குழந்தைகளைப் பொறுத்தவரை, காமாலை தடுப்பூசியில் கிடைக்கும் பாதுகாப்பைக் காட்டிலும், அதனால் ஏற்படும் பின் விளைவுகள் 100 மடங்கு அதிகம் என்று Dr. Jane orient தலைவர் (AAPS) கூறுகிறார். 1991ல் மஞ்சள் காமாலை தடுப்பூசி கொடுக்கப்பட்ட 358 காம்பிய (Gambia) குழந்தைகளில் 20ரூ மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. (Lancet Study).

கல்பாக்க கதை: அணுசக்தி நிர்வாகமும், மஞ்சள் காமாலை தடுப்பூசியும்.

மருத்துவரான நான் கல்பாக்க கதிர்வீச்சின் பாதிப்பை (Multiple Myloma - எனும் எலும்பு மஜ்ஜை புற்றுநோய், இந்தியாவிலே, கல்பாக்கத்தில் அதிகம் என்றும், அதற்கான காரணம் இங்குள்ள கதிர்வீச்சு தான் என (புள்ளி விபரங்களுடன்) நிறுவிய பின், அதுவரை பெருமளவில் சுற்றுப்புற மக்களுக்கு ஒன்றும் செய்யாத அணுசக்தி நிர்வாகம், பல மருத்துவ முகாம்களை இலவசமாக நடத்தி (என்னை ஓரங்கட்ட) அதில் மஞ்சள் காமாலை தடுப்பூசியை இலவசமாக பலருக்கும் கொடுத்து (கெடுத்து) வருவது வேடிக்கையாக உள்ளது.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதை (இக்கட்டுரையை) படித்த பின் என்ன சொல்ல போகின்றனர் என்பதை கேட்க ஆவலாக உள்ளது. இங்குள்ள அதிகாரிகள் அமெரிக்கர்கள் செய்யும் எதற்கும், எதிராக செய்வதை நினைத்து ஒரு வகையில் சந்தோஷமே. அமெரிக்காவில் Multiple Myloma - வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை கொடுக்கப்படுகிறது. இங்கு அது இல்லை. அங்கு மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயமயமாக்கப்படவில்லை. இங்கு அதை அவர்கள் ஒருவேலை கட்டாயமாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மருத்துவ முகாம்களில் கலந்து கொண்ட பல அணு சக்தி மருத்துவர்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின் குறிப்பு:

“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது”

மருத்துவ சேவையை கடும் எதிர்ப்பிற்கிடையில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தாலும் அதன் மூலம் தண்டனை பெற்றவர்கள் மிகமிகக் குறைவே. இந்திய உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பானது, மருத்துவர்கள் செய்யும் தவறுகளுக்காக குற்றவியல் வழக்கு அவர்கள் மீது தொடர முடியாது என்றும், பாதிப்பு/இறப்பிற்காக நஷ்ட ஈடு மட்டுமே கோர முடியும் என்பது மருத்துவர் கையில் எல்லையற்ற அதிகாரத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இது நீதிமன்றங்கள் மக்கள் உரிமை/நலன்கள் மீது எவ்வளவு அக்கறை கொண்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

உதவி: திரு. பாஸ்கரராவ் பேட்டி
Pharmabiz இதழ் ஜனவரி 2003